தலைப்புகளில்லா கட்டுரைகள்..!

“என்ன கட்டுரை யோசிச்சு வச்சிருக்க?“ கேட்ட சத்யாவிடம் வெறுமையாய் உதடு பிதுக்கினேன்.
“எவ்வளவு யோசிச்சாலும் தலைப்பே கிடைக்க மாட்டீங்குது“ கவலையாய் பதில் சொன்னேன்.
“வீட்லயே உக்காந்திருந்தா சரிவராது. கொஞ்சம் நடந்துட்டு வரலாம் வா“ என்றாள். எனக்கும் சரியெனப்படவே கிளம்பினோம்.
விடிந்தால் கட்டுரைப்போட்டி. பரிசு வாங்கவில்லையெனினும் நல்ல கட்டுரையென்று தோழமைக்குள் பேர் வாங்குமளவுக்காவது எழுதி விடுவதுண்டு. இம்முறை அதுவுமில்லை. இரவுக்குள் கட்டாயம் யோசித்திட வேண்டும். இல்லையெனில் மானம் போய்விடும்.
இருவருமாய் ஏதேதோ பேசிக்கொண்டு நடந்தாலும் மனம் மட்டும் கட்டுரைக்கான தேடலையே சுற்றிச்சுற்றி வந்தது.
“ஏய்.. என்ன யோசனை? எழுத முடியலனா விட்டுத்தள்ளு. அதுக்கு ஏன் பேய் பிடிச்சது மாதிரி நடந்து வர்ற?“ என்றவளிடம் “எழுதிடுவேன். பேசாம வா“ என்றேன்.
“குழந்தைத் தொழிலாளர்..“
“பாலியல்..“
“திருநங்கைகள்..“
“தலைமுறை இடைவெளி..“
மனதினுள் உருப்போட்டுக்கொண்டே வந்த சிந்தனையை சட்டென ஒரு குவியலுக்குள் நிறுத்தியது அக்காட்சி.
பேருந்து நிலையத்திலிருந்து ஒரு பெண், இடுப்பில் குழந்தையுடன் கையில் பெரிய பையுடன் இறங்கிக்கொண்டிருந்தாள்.
மின்னல் வெட்டியதாய் சட்டென பிரகாசமாய் மாறும் என் முகத்தைப் பார்த்தமாத்திரத்தில் “தலைப்பு கிடைச்சுடுச்சு போலயே?“ என்ற சத்யாவிடம், எங்களைக் கடந்து குழந்தையுடன் முன் சென்ற அப்பெண்ணை ஜாடையில் சுட்டிக்காட்டினேன். இடுப்பிலிருந்த அக்குழந்தை எங்களைப் பார்த்து சிரித்தபடி கையசைத்துக் கொண்டிருந்தது.
விவாகரத்தான பெண்களுக்கும், வாழ்க்கைல தனித்துவிடப்பட்ட பெண்களுக்கும் தன்னம்பிக்கை தரும் வகைல கட்டுரை எழுதுனா என்ன?“
“புரியல. தெளிவா சொல்லு..“ என்றாள்.
“அதாவது சுய உதவிக்குழு பற்றி, சுய தொழில் பற்றி.. சடங்கு சம்பிரதாயம் பற்றிய மூடநம்பிக்கை பற்றி எழுதுனா என்ன?“
“ம்ம் நல்ல யோசனை. சரி உன்னோட பார்வையை சொல்லு“
“நமக்கு முன்னாடி போறாங்கள்ல அவங்களைப் பாரேன். அவங்களுக்கு என்ன பிரச்சனைனு எனக்குத் தெரியாது. ஆனா என்னோட பார்வைல, குழந்தையும் பையையும் வச்சுகிட்டு இந்த வெயில்ல நடந்து போறதைப் பாக்கும்போது, ஆதரவில்லாம தனித்து விடப்பட்ட பொண்ணுங்க தான் கண்ணுக்கு தெரியிறாங்க. அதுமட்டுமில்லாம, கணவன் இறந்துட்டா செய்யப்படும் முட்டாள்தனமான சடங்குகள் பற்றிய விழிப்புணர்வையும் எழுதணும்“
சொல்லிக்கொண்டே, இன்னமும் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து கண்சிமிட்டி விளையாட்டுக் காட்டினேன். அது தன் அம்மாவின்மீது முகம் பொத்தி மீண்டும் சிரித்தது.
அவர்களைத் தொடர்ந்து நடந்தபடியே என் கட்டுரை பற்றியும், அதனான என் சிந்தனைகள் பற்றியும் சத்யாவுடன் பேசிக்கொண்டே வந்தேன்.
குழந்தையுடனான கண்ணாமூச்சி விளையாட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளியாய், என் வீடு வந்தது. அந்தப் பெண் நேராய் நடந்து கொண்டிருந்தாள். திரும்பி குழந்தையைப் பார்த்தவாறே, கட்டுரைக்கான தலைப்பு கிடைத்த திருப்தியில் பெருமையாய் சத்யாவை நோக்கினேன்.
“எல்லாம் சரிதான். ஆனா எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவேயில்ல“ என்றாள்.
என்ன என்பதாய் அவளைப் பார்த்தேன்.
“எழுத்துக்கள்ல இருக்குற வேகம் நிறையபேருக்கு செயல்ல இல்லனு தான் தோணுது..“ என்றாள்.
எதிர்பாராமல் வந்த அவளுடைய வார்த்தைகள் கோபத்தை உண்டுபண்ணினாலும், “எதுனால அப்படி சொல்ற? கண்டிப்பா இந்த மாதிரி பெண்களுக்கு என்னாலான உதவிகளை நிச்சயம் செய்வேன். நம்பிக்கையில்லேனா விடு. அதுக்காக என் முயற்சியை கேலி பண்ணாத“ என்றேன் ஆத்திரத்துடன்.
“இருக்கலாம். ஆனா பின்தொடர்ந்து வந்தியே தவிர, கடைசி வரைக்கும் அந்தப் பொண்ணு கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்த பையை வாங்கணும்னு தோணவேயில்லயே உனக்கு“ என்றபடி ஏளனமாய் என்னைப் பார்த்தாள்.
“அது வந்து.. அது..“
என்ன சொல்வதென்று தெரியவில்லை. சத்யா ஏதும் சொல்லாமல்  உள்ளே சென்றுவிட்டாள்.
யோசித்தவாறு இரு உள்ளங்கைகளையும் முகத்திற்குமுன் விரித்துப் பார்த்தேன். நிஜம் தான். வர்ணித்தேனே தவிர வேறொன்றும் செய்திடவில்லை நான்.
குழந்தையையும் பையையும் தூக்கிச்சென்ற அப்பெண்ணை திரும்பிப் பார்த்தேன். மீண்டுமொருமுறை என்னைப் பார்த்துச் சிரித்தது அந்தக் குழந்தை.

.

Comments

சத்யாவிற்கும் தோணவில்லை பாருங்கள்...!
வக்கம்
சிறப்பான கருத்தை சொல்லியுள்ளிர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சில சமயம் பேச்சில் இருக்கும் வேகம் செயலில் இல்லாமல் தான் போய்விடுகிறது! அருமையான கதை! நன்றி!
நம் நோக்கம் ஒன்று இருக்கும் பொது செயல்பட தவறுவது உண்டு இல்லையா...அருமை !

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்